நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3

தலைவனும், தலைமுறையும்

www.sinegithan.in


தொடர் - 3


நம்முடைய ஓட்டமல்ல, 

தேவனுடைய ஓட்டம்

ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைத்ததும், நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதோர் சத்தியம், 'நாம் நமக்காக அல்ல, பரலோகத்தில் வீற்றிருக்கும் பிதாவுக்காகவே ஓடத் தொடங்கியிருக்கின்றோம்' என்பதே.  ஊழியத்தின் பாதையிலும், நமது ஓட்டத்தைத் தொடங்கும் முன் எழுதப்படவேண்டிய ஆரம்ப வரிகளும் இவைகளே. சிலுவையில் இயேசு  கிறிஸ்து செய்து முடித்த பிதாவின் சித்தத்திற்குள் பொதிந்திருக்கும் இந்த இரகசியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய சிந்தையிலிருந்து நாம் சிதறச் செய்துவிடக்கூடாது. எத்தனையோ வியாதியஸ்தகளை குணமாக்கியபோதிலும், திரளான ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்திருந்தபோதிலும், பிதாவின் வார்த்தைகளை தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசித்திருந்தபோதிலும்,  அநேகரை போஷித்திருந்தபோதிலும், பலருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகளை நிறைவாக்கியிருந்தபோதிலும், மக்களாலேயே மதிக்கப்படாமலிருந்த மனிதர்களை கரங்களால் தொட்டு சுகமாக்கியிருந்தபோதிலும், பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த ஜனங்களை கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினபோதிலும், எந்த இடத்திலும் அவர் தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்திக்கொள்ளாமல், மேன்மைப்படுத்திப் பேசாமல், சிலுவையில் அறையப்படும் வரைக்கும் தனது சரீரத்தை ஒப்புக்கொடுத்தாரே. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி 2:6-8) என்றுதானே இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம். ஆம், நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்தார் என்ற செய்தி ஒருபுறம் நமது காதுகளில் ஒலித்தாலும், 'தன்னுடைய சரீரத்தையும் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார் என்ற செய்தியினாலேயே அது பூரணமாக நிறைவேறியது என்பதே சத்தியம். 

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா 53:5) என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயாவினால் உரைக்கப்பட்ட வார்த்தை சிலுவையில் நிறைவேறினது உண்மையே. மேலும், நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேது 2:24) என்று பேதுரு பெயர்த்தெழுதும் சத்தியமும் உறுதியானதே. என்றபோதிலும், 'சிலுவையில் இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் சுமந்து தீர்க்கப்பட்டபோது, செய்து முடிக்கப்பட்ட மற்றொரு காரியத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.' அது என்ன? நம்முடைய பாவங்கள் மாத்திரமல்ல, அவைகளைச் சுமந்த அவரும் அடிக்கப்பட்டார் என்பதே. அதாவது, நம்முடைய பாவங்கள் மாத்திரமல்ல, நம்முடைய சரீரமும்  அதாவது பாவத்தை பிறப்பிக்கத் தூண்டும் மாம்சமும் அவரோடுகூட சிலுவையில் அறையப்படவேண்டும் என்பதே.  

இதனையே, 'நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்' (ரோமர் 6:6) என்று ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் நாம் வாசிக்கின்றோம். அத்துடன், 'கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்' (கலா 2:20) என்று பவுலும் இந்தக் காரியத்தையே உறுதிப்படுத்துகின்றார். என்றபோதிலும், அநேக நேரங்களில் இந்த சத்தியத்தை நாம் மறந்துவிடுகின்றோம், ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றோம், உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். பாவங்களை மட்டுமே சிலுவையில் தொங்கும் இயேசுவின் மீது வைத்துவிட்டு, நாமோ சிலுவையில் அறையப்பட்டுவிடாதபடி பத்திரமாக சிலுவையை விட்டுக் கடந்துசெல்லப் பிரயாசப்படுகின்றோம். இதுவரை நாம் செய்த அத்தனை பாவங்களும் இயேசு கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டாலும், நம்முடைய மாம்சம் அதற்கு மறுவழி கொடுக்குமென்றால், அத்தனை பாவங்களும் நம்முடைய சரீரத்தில் மறுபிறப்பு அடைந்துவிடுமே. தோட்டத்தை சுத்திகரிப்பது மாத்திரமல்ல, மீண்டும் களைகள்  முறைத்துவிடாதபடியும், சத்துருவினால் விதைக்கப்பட்டுவிடாதபடியும், மாம்சத்தில் மறுபடியும் பிறந்துவிடாதபடியும் சுற்றிலும் வேலியடைத்துக் காக்கவேண்டியது கட்டாயமல்லவா. 

நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபே. 2:2-5) என்றே நமது முந்தைய வாழ்க்கையின் நிலையினைக் குறித்து பவுல் எழுதுகின்றார். இப்படிப்பட்ட நிலையில் காணப்பட்ட நம்முடைய வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்ட பரத்திற்கு விரோதமான பாவங்களை மாத்திரம் சிலுவையில் வைத்துவிட்டு, நம்மையும் சேர்ந்து அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்காததினாலேயே, 'அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்' (லூக் 11:24-26) என்ற நிலை 'இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகின்ற அநேகருடைய வாழ்க்கையிலும் காணப்படுகின்றது'.

இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள், மனந்திரும்பியவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள், ஆலயத்திற்குச் செல்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் என்று உரக்கச் சொல்லிக்கொண்டாலும், சிலுவையில் அறையப்படாத அநேகருடைய மாம்சமோ மண்ணோடுதான் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. வாக்குவாதங்கள், பெருமைகள், பொறாமைகள், பகைகள், காமவிகாரங்கள் போன்ற அநேக மாம்சீகத் தாறுமாறுகளை அவர்களுடைய மாம்சங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொடுதானிருக்கின்றன. 'என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்' (2சாமு 1:9) என்று சவுல் சொன்னதைப் போல, இவர்களது மாம்சம் மரிக்காதது இன்னும் பலருக்கு வேதனையாகவே இருக்கின்றது. 

மேலும், 'எனது பாவத்திற்குக் காரணம் சாத்தான் மாத்திமே' என்ற ஒருபுற அறிவினால் மாத்திரமே தங்கள் சிந்தையை நிறைத்திருக்கும் மனிதர்கள், தங்களுடைய மாம்சம் விரிக்கும் வலைகளில் சிக்கிக்கொள்வது நிச்சயம். தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் தங்களுடைய சொந்த மாம்சமே என்பதையும் அறிந்துகொள்ளாமல், உணர்ந்துகொள்ளாமல், வீழ்ச்சிக்குப் பின்னும் சாத்தானையே குற்றஞ் சுமத்தும் நிலைக்குள்ளாகவே இவர்கள் காணப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் சிலுவையில் அறையப்படாத மாம்சத்தை சுமந்து திரிபவர்கள். 

இவர்கள், தங்களுடைய செயல்கள் அத்தனையையும் 'தங்களுடைய ஓட்டமாகவே கருதுபவர்கள், 'தேவனுடைய ஓட்டம்' என்ற சிந்தையிலிருந்து தூரமாக வாழ்பவர்கள். 'என்னுடைய ஊழியம்' 'என்னுடைய சொத்து' 'என்னுடைய பிரசங்கம்' 'என்னுடைய பாடல்' 'என்னுடைய எழுத்து' என்று, தங்களிடத்திலிருந்து வெளிப்படும் அத்தனையையும் என்னுடையது, என்னுடையது, என்னுடையது என்று  சொந்தம் பாராட்டுபவர்கள். தாங்கள் எழுதும் பாடல்களுக்கும், பாடும் பாடல்களுக்கும்கூட 'காப்புரிமை' வைத்துக்கொண்டு, அடுத்தவரை 'காப்பி' செய்ய விடாதவர்கள். இவர்கள் சுவிசேஷத்தின் பெலனை தங்கள் மாம்சத்தில் அனுபவிக்கத் துடிப்பவர்கள். இத்தகைய மாம்சீக சிந்தையிலிருந்து கர்த்தர் நம்மை விலக்கிக் காப்பாராக. 

என்னுடைய எழுத்து ஊழியத்தினைத் தொடங்கும்போது, நான் செய்த அர்ப்பணமும் இதுவே. எனவே, சிநேகிதன் (www.sinegithan.in) இணையதளத்தில் வெளியிடப்படும் வேததியானச் செய்திகளையோ அல்லது வேதத்திற்கடுத்த எந்த ஒரு கட்டுரைகளையோ என்னுடையது என்று எண்ணாமல், 'ஆவியானவருடையது' என்று எண்ணி உரிமையுடன் எடுத்து அவைகளை அப்படியே தாங்கள் பயன்படுத்திக்கொள்ள அனைவருக்கும் அனுமதி அளித்திருக்கின்றேன். அவைகளை பத்திரிக்கைகளில் பிரசுரிக்கவோ அல்லது புத்தகமாக அச்சிட்டுக்கொள்ளவோ என்னிடம் அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை, முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. 'நன்றி' என்ற வார்த்தையுடன் எனது பெயரைக் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமுமில்லை,  அவருக்கே கனமும் மகிமையும் உண்டாகட்டும்.

'குழாயில் வரும் நூற்றுக்கணக்கான குடம் தண்ணீருக்கு, குழாய் சொந்தம் கொண்டாடுவது சரியல்லவே' தொட்டியில் இருக்கும் தண்ணீர் எல்லாருக்கும் சொந்தமானதே, என்னுடைய குழாயில் வந்ததற்காக அதை என்னுடையது என்று சொல்லிவிடமுடியாது.  'கர்த்தருடைய வீட்டில் நாம் 'பந்தி பரிமாறுபவர்களே'. 'என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா' (மத்தேயு 20 :15) என்ற வசனம் சொல்வது அதுவே. 'Copyright' என்ற வேலிக்குள் எதுவும் அடைக்கப்படவில்லை. You have a right to copy. சில ஊழியர்கள் வெளியிடும் பாடல் CD மற்றும் DVD களில், 'ஓரிஜினல் கேசட்டுகளையே வாங்கி உபயோகியுங்கள், போலிகளை வாங்கிவிடாதீர்கள்' என்ற அறிவிப்பு சொல்லப்படுவது, அவர்கள் வியாபாரிகள் என்பதையே வெளிக்காட்டுகிறது. காப்பி செய்த கேசட்டிலும் அதே பாட்டுதானே படிக்கும், அதே செய்திதானே கேட்கும், அப்படியென்றால், ஓரிஜினலை வாங்குங்கள் என்று வற்புறுத்த, 'ஆவியானவர் என்ன DVD யிலா இருக்கிறார், இல்லவே.

'என்னுடைய பாடலை நீ பாடக்கூடாது' என்ற சச்சரவும், 'திருட்டு ஏஊனு' என்ற எச்சரிப்பும் சினிமா உலகத்தில் நடைபெறுவது. இதனை சத்துரு சத்தியத்தை அறிவிப்போரிடம் நுழைப்பது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. சுவிசேஷம் பரவாதபடி நம்மைக் கொண்டே சத்துரு வேலி அமைப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

நாங்களும் உங்களைப்போலப்பாடுள்ள மனுஷர்தானே,  (அப்போஸ்தலர் 14 :15).  பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே (1 கொரிந்தியர் 3 :5)  என்ற சிந்தை உயர்ந்திருக்குமாயின், உயர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் தகர்ந்துபோம். பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே ழூபணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன் (லூக்கா 22:27)  என்கிறாரே இயேசு. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் போதித்துவிட்டு, இதில் மாத்திரம் மறைமுகமாக உதாரத்துவமாகக் கொடுக்கவேண்டிய காணிக்கையை, கட்டாய காணிக்கையாக, ஏலியின் குமாரர்கள் எடுத்ததைப்போல இலாபமாக நாம் நுழைத்து விடக்கூடாது. 'தானியத்தைக் கட்டிவைக்கிறவனை' ஜனங்கள் சபிப்பார்கள்: விற்கிறவனுடைய (கொடுக்கிறவனுடைய) தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும் நீதிமொழிகள் 11 :26 என்பதுதான் நீதியின் மொழி.

'அப்படியென்றால் விற்கலாமோ?' வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் (மத்தேயு 10:8) என்ற வசனம், கர்த்தரிடத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டவைகளை விற்கக்கூடாதபடி நம்மைத் தடுக்கின்றதே. செலவுகள் வாங்கப்படலாம், ஆனால் செய்திகள் விற்கப்படக்கூடாது.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் (மத்தேயு 10 :20). அவர் பேசுகிற ஆலயமாகிய நம்முடைய வீட்டை வியாபார வீடாக்கி விடாதபடி கவனமாயிருப்போம்.போரிடும் உரியாவின் கையில்  அவன் உயிர் போகும் கடிதத்தை தாவீது கொடுத்து ஒரு வீரனை இழந்ததுபோல, ஆண்டவரது படைப்புகளின் மேல் நமது எழுத்துக்கள் தடைகளாகி, வீட்டிற்குள் முடக்கிவிடாதபடி காத்துக்கொள்ளுவோம்.

அவ்வாறே, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது 5:7) என்ற ஆலோசனையினையும், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத். 11:28-29) என்ற ஆலோசனையினையும் ஏற்றுக்கொள்ளாமல், கஷ்டங்களையும் மற்றும் கவலைகளையும் தாங்களே தங்கள் மாம்சத்தில் சுமந்துகொண்டிருக்கும் மனிதர்களும் இந்த உலகத்தில் அநேகர் உண்டு. நம்முடைய வாழ்க்கையின் ஓட்டம் அவருடையது என்ற அர்ப்பணிப்பு நம்மிலே உண்டாயிருக்குமென்றால், அச்சம் என்ற வார்த்தைக்கு நிச்சயம் இடமிறாது. 


Comments

Popular posts from this blog

வெற்றியா? வெற்றிடமா? - 1

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4